cinema

img

“வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்!”

“ரோமா” (ROMA)-2018-(மெக்சிகோ) (நெட்பிளிக்ஸ்)

பூர்வகுடியான க்லியோ, வெள்ளைக் கார அண்டோனியோ மற்றும் சோபியா குடும்பத்தின் நான்கு குழந்தை களுக்கு செவிலியாக பணி புரிகிறாள். இவளது தோழி அடெலா. இவளும் பணிப்பெண்ணாக இவ்வீட்டிலே பணிபுரிகிறாள். அண்டோனியோ அடிக்கடி வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதாகக் கூறி, வேறு பெண்ணோடு ஊருக்குள்ளே சுற்றுகிறவன். இதனால் இருவருக்குமிடையே நெருக்கத்தை விட ஒரு பதற்றமே எப்போதும் நிலவுகிறது. ஒரு விடுப்பு நாளில், க்லியோ தனது தோழி அடெல்லாவின் உறவினரான ஃபெர்மினுடன் டேட்டிங் போகிறாள். ஃபெர்மின் தற்காப்புக் கலையான கம்பு சுழற்றுவதில் வல்லவன். அதில் தனது திறமையை வெளிக்காட்ட; அது க்லியோவால் ஈர்க்கப்பட; கர்ப்பமாகிறாள். க்லியோ, கர்ப்பம் ஆனதை அறிந்த ஃபெர்மின், சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடுகிறான். ஆனால் சோபியா வேலையை விட்டு நீக்காமல், பெருந்தன்மையோடு வேலையில் தொடர அனுமதிக்கிறாள். கர்ப்பவதி க்லியோ, செவிலியாக குழந்தைகளை பராமரித்துக் கொண்டே, ஃபெர்மினைத் தேடி அலைகிறாள். இறுதியில் அரசுக்கு எதிராக செயல்படும் சிஐஏ வழிகாட்டும் அமைப்பில் செயல்படு வதை காண்கிறாள். இவனிடம் தனது கர்ப்ப நிலையைச் சொல்ல, அவனோ க்லியோவை கம்பைச் சுழற்றி மிரட்டி விரட்டுகிறான். பிறக்கவுள்ள க்லியோவின் குழந்தைக் காக, தொட்டில் வாங்க, சோபியாவின் தா மற்றும் க்லியோ பல்பொருள் அங்காடிக்கு செல்கின்றனர். அங்காடியருகே மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. போராட்டம், கலவர மாக மாறுகிறது. அக்கலவரத்தில் ஒருவன் உயிருக்கு தப்பி அங்காடிக்குள் ஒளிகிறான்.

அவனை கைத்துப்பாக்கியோடு ஒரு கும்பல், சுட்டுத் தள்ளுகிறது. கிலியோ கண்ணெதிரே இக்கொலையை நடத்திய கும்பலில் ஃபெர்கி னும் இருக்கிறான். அதிர்ச்சியில் கிலியோ வுக்கு அங்கேயே பனிக்குடம் உடைகிறது. போக்குவரத்து நெரிசலில், மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் க்லியோவுக்கு குழந்தை பிறந்ததா? கணவனால் வஞ்சிக்கப் பட்ட சோபியா, காதலனால் ஏமாற்றப்பட்ட க்லியோ, வாழ்வை எவ்வாறு எதிர்கொண்ட னர்? என்பதை பல படிமங்களின் துணையோடு, உயிரோட்டமான காவியமாக விடை அளிப்பதே மீதப்பகுதி. சோபியாவின் பண்ணை வீட்டில் க்லியோ வும், முதியவளும் காரில் உள்ள சூட்கேஸ் களை தூக்கிச் செல்கையில் முதியவள், “நீ, வயித்து பிள்ளைக்காரி; கனமான பொருட் களை தூக்காதே” எனச்செல்லமாகக் கூறு வாள். அதற்கு க்லியோ, “கர்ப்பமாகத்தான் உள்ளேன். நான் நோயாளி இல்லை. மலைகள் நீண்ட வயதுடையவை தான். ஆனால் இன்றும் எவ்வளவு பசுமையாக உள்ளன” என்று பதில் கூறுவதும்; சோபியாவின் பண்ணை தோட்டத்தில் உறவினர்கள் குழந்தைகளுடன் மலை ஏறச் செல்கையில்,  ஒரு முதியவள், விரைந்து மலையேறினால் தான் ஸ்கர்ட் உச்சியை அடைய முடியும், எனக்கூறுவாள். அதற்கு குழந்தைகள் எதிர் வினையாக கிண்டல் தொனியில் பேசிக் கொள் வார்கள். “மலை ஸ்கர்ட் போட்டு இருக்குமா? மலை ஏறும்பொழுது ஸ்கர்டுக்குள் பேன்டீஸ் தெரியும் அல்லவா?”என்று ஒரு குழந்தை சொல்லும். அப்போது ஸ்கர்ட் போட்ட க்லியோ, குழந்தைகளுக்கு முன்பாக மலை மீது ஏறி இயற்கை அழகை சுவாசிப்பாள்.ஆக, மலையின் கம்பீரக் குறியீடாகவே க்லியோ பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

 நீச்சல் தெரியாத க்லியோ, தனது குழந்தை இறந்ததையே எந்நாளும் நினைத்து வருந்து கிற நிலையில், கடலில் மூழ்கிய சோபியாவின் குழந்தைகளான ஷோஃபி, பெபேயை காப்பாற்றுகிறாள். அப்போது, “இனி, இறந்த குழந்தை எனக்கு வேண்டாம்”என்ற தொனியில் காப்பாற்றிய குழந்தைகளை கட்டி தழுவி அழுகிறாள். சாவின் விளிம்பிற்குச் சென்ற இரு உயிர்களை காப்பாற்றிய அக்கணமே, வாழ்வு குறித்த புதிய நேர்மறை யான பார்வை அவளுக்கு ஏற்படுகிறது.அதன்பின், காரில் திரும்புகையில் இதுவரை இறுக்கமாக இருந்த க்லியோ, அப்போதுதான் முதன்முறையாக தனது புன்னகையால் சந்தோசத்தை காட்டுகிறாள். தனித்தே வாழ்வை எதிர்கொள்ள முடியும் என்பதன் வெளிப்பாடே க்லியோவின் இப்புன்னகை. சோபியா தனித்து வாழ முடியும் என்பதற்கான அடையாளமே அடிக்கடி காரை சேதப்படுத்தும் சோபியா, கணவனின் பழைய காரை தெருவில் நிறுத்தி, புதிய காரை சேதமின்றி வீட்டிற்குள் கார் நிறுத்து மிடத்தில் நிறுத்துவது. இறுதியில், வீட்டின் பொருட்கள் ஏற்கனவே இருந்த இடத்தி லிருந்து வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்படு கின்றன. புத்தகங்களை ஓரங்கட்டி, அதன்மேல் புத்தர் சிலை அமர்ந்திருக்கின்ற பின்னணியில், க்லியோ பழைய துணிகளை துவைக்க எடுத்துச் கொண்டு மாடியேறுகிற காட்சியோடு, கேமரா திறந்த வான்வெளியைக் காட்டுகிறது. அதில் விமானம் பறக்கின்ற காட்சி வருகிறது. அப்போது “பறக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டால், முதலில் சுமைகளை தூக்கி எறியுங்கள்” என்ற பௌத்த தத்துவம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடிய வில்லை. எழுபதுகளின் காலத்திய மெக்சிகோ சிட்டி கடை வீதிகளை, வீடுகளை சிறு துளி கூட பிசிறின்றி செட் அமைத்து, அக்காலத் திற்கே, நம்மை அழைத்துச்சென்ற ஆர்ட் டைரக்டரின் தனித்திறன் மிகுந்த பாராட்டுக் குரியது. பின்னணி இசையே படத்தில் பயன் படுத்தப்படவில்லை.

திரைக்கதைக்கான சட்டகங்களுக்குள் வரும் அஃறிணை, உயர்திணை ஆகியவைகள் எழுப்புகின்ற ஒலிகளே பின்னணி இசை. இயக்குநர் அல்போன்சா குயூரான். மெக்சிகோ நாட்ட வரான இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப் பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் கிராவிட்டி, ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர்.  இப்படம் கருப்பு வெள்ளையில் படமாக்கப் பட்டுள்ளது. இயக்குநரே ஒளிப்பதிவாளராக வும் பணியாற்றியுள்ளார்.முதல் காட்சியில் காரை நிறுத்தும் பகுதியின் தரையினை, க்லியோ தண்ணீரால் கழுவுகின்ற போது, ஊற்றப்பட்ட நீரில், வான்கூரையற்ற திறந்த வெளி வழியே, செவ்வகமான வான் பகுதியின் நிழல் தெரியும். அதில் விமானம், பறவைகள் பறக்கின்ற, பிம்பங்கள் தெரியும். நீர் கலங்கும் போது, வான் பகுதி பிம்பமும் கலங்கும்.நீர் தெளிவான பின்பு மீண்டும் வான் பிம்பம் தெளி வாகத் தெரியும். ஒரு கட்டத்தில் தரையை சுத்தப் படுத்திய நீர், அழுக்கு நீராக மாறி, வடிகாலில் வெளியேறும். இந்த வான் பிம்பம் ஆரம்ப காட்சியாக, நீண்டநேரம் காண்பிக்கப்படும். இறுதிக் காட்சியில் வீட்டின் தரைத் தளத்தி லிருந்து க்லியோவால் மொட்டை மாடிக்கு, துவைக்க துணிகளை எடுத்துச் செல்லுகை யில் வானத்தில் விமானம் பறக்கின்ற காட்சி யுடன் வானம் நீண்ட நேரம் காண்பிக்கப்படும். இவ்விரண்டு நிழல், நிஜக்காட்சிகளும், குறிப்பாக தண்ணீரில் விமானம் பறக்கின்ற அந்த பிம்பக்காட்சி பிரமிப்பாக படமாக்கப் பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருது இப்படத்திற்கு கிடைத்ததி லிருந்து, மேற்கண்ட ஒளிப்பதிவின் மகத்துவம் புரியும். யாலிட்ஷா அபாரிசியோ, க்லியோ என்ற பாத்திரத்தில் வாழ்ந்துள்ளாள். குழந்தை பிரசவிக்கும் காட்சியில் இவளது நடிப்பு,கலங்க வைக்கிறது. இளம் பிராயக் குழந்தைகளாக நடித்துள்ள நால்வருமே அசத்தியுள்ளனர். சோபியாவாக மரியா டி தவிராவும்,தகப்பனாக பெர்ணான்டோ கிரடி யாகாவும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர க்லியோவின் காதலன் பெர்மின் ஆக ஜார்ஜ் ஆண்டோ சிறப்பாக நடித்துள்ளார். வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல உலக விருது களை அள்ளிக் குவித்துள்ளது இத்திரைப்படம்.